தமிழகத்தில் பெருமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகளைக் கண்காணிக்க மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. அதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். தற்போது, அவர்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மையம் கொண்டுள்ளதால் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகளைக் கண்காணிக்க மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இன்று ஆய்வு மேற்கொண்டார். 6 பேர் கொண்ட குழு 3 பிரிவுகளாக 24 மணிநேரமும் நீர்நிலைகளைக் கண்காணிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.�,