‘சிறுதானியங்களை அன்றாட சமையலுக்குப் பயன்படுத்த முடியுமா? இவற்றில் சுவையான உணவுகளைச் சமைக்க முடியுமா?’ என்பது ஆரோக்கியம் விரும்பும் பல பெண்களின் கேள்வி.
‘‘நிச்சயம் முடியும்!’’ என்பதற்கு உதாரணம் இந்தச் சிறுதானிய கொழுக்கட்டை. சிறுதானிய உணவுகளைச் சமைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால்… சிறிய அளவில் சமைத்துப் பக்குவம் பழகிய பிறகு அதிகளவில் சமைக்கலாம்.
என்ன தேவை?
கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி அரிசி, சாமை, வரகு, தினை எல்லாம் சேர்த்து – ஒரு கப்
துவரம்பருப்பு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
அனைத்து சிறுதானியங்கள் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றைக் கழுவி, இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக, அதிகம் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், அரைத்த மாவை ஊற்றிக் கிளறவும். மாவு கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி மறுபடியும் கிளறி, சற்று சூடாக இருக்கும்போதே கொழுக்கட்டை பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: பச்சைப்பயறு உருண்டைக் குழம்பு](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/03/6)
�,