டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி – விஜய்: நடப்பது என்ன?

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. காலை வணக்கம் என்ற மெசேஜோடு சேர்த்து, தீபாவளி ஸ்பெஷல் செய்தியும் வந்தது.

“தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவுக்கும் நடிகர் விஜய் தரப்புக்கும் இடையேயான பிரச்சினை இப்போது பிகில் சிறப்புக் காட்சிகள் என்ற வடிவத்தில் வெடித்திருக்கிறது. பிகில் ஆடியோ விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் வார்த்தைகள் தமிழக முதல்வர் எடப்பாடியைக் குறிவைத்தே பேசப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதற்கு அதிமுக அமைச்சர்கள் தரப்பில் கண்டனங்களும் எழுந்தன. பிகில் வெளியீட்டில் சிக்கல் இருக்கும் என்று இந்தப் பின்னனியில் பலரும் எதிர்பார்த்த நிலையில், சிறப்புக் காட்சிகளுக்கு அரசு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது.

சமீப காலமாக விஜய் மட்டுமின்றி அஜீத், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள் மக்களுக்கு ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரசிகர் மன்றத்தினருக்காக சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமாகிவிட்டது. விஜய்யின் முந்தைய படமான சர்கார், பேட்டை, விசுவாசம் போன்ற படங்களின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. நள்ளிரவு தொடங்கி அதிகாலை அல்லது அதிகாலை தொடங்கி காலை வரையிலான இந்தச் சிறப்புக் காட்சிகளுக்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றும் பொதுவான குரல்கள் சினிமா உலகத்திலிருந்து எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாகவே செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜு, பிகில் விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். பிகில் உட்பட எந்தச் சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று முதலில் கூறிய அவர், அடுத்து சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தால் அந்தக் கட்டணங்களைத் திருப்பித் தர வேண்டும் என்றும் அடுத்த பட்டாசைப் பற்றவைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி எங்களுக்குத் தந்தை மாதிரி என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருக்கிறார் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர். அமைச்சர் பட்டாசை வீச, விஜய்யின் அப்பாவோ அமைச்சரை நோக்கி தீபாவளி பலகாரத்தைப் படைத்திருக்கிறார் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

ஒவ்வொருமுறை விஜய் படம் ரீலீஸ் ஆகும்போதும் இதுபோல ஆடியோ விழாவில் அரசியல் பேசுவதும், பட ரிலீஸின்போது அதன் விளைவுகள் வெடிப்பதும் தொடர்கதைதான். இந்த முறை கொஞ்சம் கூடுதலாகவே எடப்பாடியைத் தாக்கிவிட்டார் விஜய். இந்தப் பின்னணியில் சிறப்புக் காட்சிகளுக்காகத் தமிழக அரசிடம் விண்ணப்பக் கடிதம் கொடுத்திருக்கிறது தயாரிப்புத் தரப்பு. இது வழக்கமான நடைமுறைதான். இதையும் தாண்டி ஆளும் தரப்பை விஜய் சைடிலிருந்து அணுகியிருக்கிறார்கள். அப்போது, ‘நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எடப்பாடி பழனிசாமிதான் இப்ப முதலமைச்சர். இதை நீங்க மாத்த முடியாது. ஏற்கனவே விஜய்யோட அப்பா சிஎம் என்கிற கேப்மாரினு ஒரு படத்துக்கு பேரு வெச்சாரு.

இப்ப என்னடான்னா ஆடியோ லேஞ்ச்ல விஜய் யாரை எங்க வைக்கணும்னு ஆரம்பிச்சி என்னென்னமோ பேசுறாரு. என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க. பண்றதெல்லாம் பண்ணிட்டு கடைசியில ரிலீஸ் ஆகும்போது வந்து சமாதானம் பேசுறீங்க. எடப்பாடி உங்க மேல உக்கிரமா இருக்காரு. அதனால எதுவும் முடியாது’ என்றவர்கள் விஜய் தரப்பின் தொடர் வற்புறுத்தலையெடுத்து ஒரு ‘பெரிய’ விஷயத்தைக் கேட்டிருக்கிறார்கள். இதற்கு விஜய் தரப்பு மசியாததால் 200 கோடி ரூபாய்க்கு மேல் பிசினஸ் பண்ணுற உங்களுக்கு இது பெரிய விஷயமா என்றும் ஆளுங்கட்சிப் புள்ளியே கேட்டிருக்கிறார்.

இந்த இடைவெளியில்தான் பிகில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை, கட்டணம் திரும்பக் கொடுக்கப்படும் என்ற அறிவிப்புகள் எல்லாம் வந்தன. ஒருபக்கம் அந்த பெரிய விஷயம் பற்றி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில்தான் எஸ்.ஏ.சந்திரசேகர் எடப்பாடியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, ‘வீட்ல ஒரு பிரச்சினைன்னா நாம அப்பாகிட்ட சொல்லுவோம். அதுபோல நாட்ல ஒரு பிரச்சினைன்னா தமிழ்நாட்டோட அப்பா மாதிரி இருக்கிற முதல்வர்கிட்ட முறையிடுறோம்’ என்று ஒரு டயலாக்கை விட்டிருக்கிறார். சிஎம் என்கிற கேப்மாரி என்று படத்துக்குத் தலைப்பு வைத்த எஸ்.ஏ. சந்திரசேகர் இப்போது சிஎம் என்றால் தந்தை என்று இறங்கி வந்திருப்பதன் பின்னால் நடந்தது பிகில் ஸ்பெஷல் ஷோ உள்ளிட்ட விஷயங்கள்தான் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

கடைசியாகக் கிடைத்திருக்கும் தகவலின்படி, ‘ஒவ்வொரு முறையும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லைன்னுதான் தமிழக அரசு சொல்லி வந்திருக்கு. ஆனால், சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுதான் வந்திருக்கின்றன. பேட்டை, விசுவாசம், சர்கார் படங்களுக்கும் இப்படிதான் சொன்னாங்க. ஆனால் சிறப்புக் காட்சி நடந்துச்சு. அதுக்குப் பிறகு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்புவோம்னு சொன்னாங்க. ஆனா, அதுக்கு மேல எதுவும் நடக்கல. அதனால அதே மாதிரிதான் பிகிலுக்கும் ஆகும். அரசுக்கு ஆதரவா தானே வாய் திறந்தா பிகில் இமேஜ் டேமேஜ் ஆகும்னு அப்பா மூலமாக எடப்பாடிக்கு விஜய் மெசேஜ் கொடுத்திருக்காரு. அது வொர்க் அவுட் ஆகிடும் போலிருக்கு’ என்கிறார்கள் சினிமா – அரசியல் வட்டாரத்தினர்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share