தேர்தலில் தீபா பேரவை போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் மனம் வருந்துவார்கள், எனவே அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறோம் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரு அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு அணிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு தலைவர்கள் பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டனர்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா, 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதே நேரத்தில் யாரிடமிருந்தாவது அழைப்பு வந்தால் அதனை கவனத்தில் கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் இன்று (மார்ச் 22) செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட தீபா பேரவை, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டால் அது அதிமுக தொண்டர்கள் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். எனவே வரும் தேர்தலில் அதிமுகவிற்கும் இரட்டை இலை சின்னத்திற்கும் மனப்பூர்வமான ஆதரவை தெரிவிக்கிறோம். எனது இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அதிமுகவின் வெற்றிக்காக செயல்படுவார்கள். சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
“தீபா பேரவையை அதிமுகவுடன் இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் நடைபெறவுள்ளதால் அது தள்ளிப்போயுள்ளது, தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும். அதிமுகவில் இணைந்தால் எந்தப் பதவியும் எனக்குத் தேவையில்லை. ஜெயலலிதாவின் உறவினராக இருந்துகொண்டு அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டுசெல்ல நான் விரும்பவில்லை” என்று விளக்கமளித்த தீபா, அதிமுக தலைமையிடமிருந்து அழைப்பு வந்தால் பிரச்சாரத்திற்கு செல்வேன் என்றும் குறிப்பிட்டார்.�,