&
மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் உள்ள கடைகளை திறக்க உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
சிற்பக் கலையின் பொக்கிஷமாக விளங்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, இரவு 10:30 மணி அளவில், கிழக்குக் கோபுர வாசல் அருகே இருந்த 50 கடைகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகின.மேலும், கோயிலின் வீரவசந்தராயர் மண்டபமும் பெருமளவு சேதமடைந்தது.
இதனால் கோவிலின் புனித தன்மை கெட்டுவிட்டதாகவும், அறநிலையத்துறை முறையாக செயல்படவில்லை எனவும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து, கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், முறையாக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ராஜநாகுலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எம்.எஸ். ரமேஷ், மீனாட்சி அம்மன் கோயில் சன்னிதி அருகே உள்ள 51 கடைகளை மட்டும் திறந்து கொள்ள இன்று அனுமதி வழங்கினார்.
மேலும், கடை உரிமையாளர்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்கிறோம் என உறுதிமொழி பத்திரம் அளிக்குமாறும், வாடகை பாக்கிகளை முறையாக கோயில் நிர்வாகத்திடம் அளிக்குமாறும் நிபந்தனை விதித்துள்ளார்.�,