சாலையில் வைக்கப்பட்டுள்ள விதிமீறல் பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமாக விதிகளை மீறி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்படுவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது. எனினும் பேனர் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது
கோவையில் ஆர் எஸ் புரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சிக்காக அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரை வரவேற்க கடந்த ஒரு வாரமாக விதிகள் மீறி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி முறையிட்டார்
இதனை இன்று (பிப்ரவரி 18) விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல் குமார், “விதிகளை மீறிய பேனர்களை அகற்ற கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது அதை அரசு இதுவரை அமல்படுத்தவில்லை” என கடும் கண்டனம் தெரிவித்தனர்.
விதிமீறல் பேனர் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் அரசு செயல்படுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விதிகள் மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்து கொண்டே செல்வதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், கேட்டு சொல்வதாக தெரிவிப்பதற்கு எதற்கு அரசு வழக்கறிஞர்கள் ஊதியம் பெற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர்.
விதிமீறல் பேனர்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் கால அவகாசம் வாங்கி கொண்டே இருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் ஏற்படும். அந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை தூண்டுகிறது அரசு எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் தான் தண்டனை, ஆனால் நீதிபதிகள் நேரடியாக நடவடிக்கை எடுக்க அளவில்லா அதிகாரம் இருப்பதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
விதிமீறல் பேனர்களை ஒரு வாரமாக அகற்றவில்லை என்றால் அரசு அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா? அல்லது ஹெலிகாப்டரில் பறக்கிறார்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக டிராஃபிக் ராமசாமி மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.�,