ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் கிடையாது – ரிசர்வ் வங்கி

public

இந்தியா ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன் மற்ற அரசியல் தலைவர்களின் படங்களும் இணைக்க பரிசீலனை நடந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரூபாய் நோட்டில் வாட்டர் மார்க் எனப்படும் மறைவாக தெரியும் வகையில் காந்தியின் படம் இடம் பெற்றிருக்கும். இதில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL), மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு செட் மாதிரிகளை, ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பி இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவர்தான் ரூபாய் நோட்டுகளுக்கான வாட்டர் மார்க் படங்களை தேர்வு செய்து அரசுக்கு பரிசீலனை செய்பவர் ஆவார்.

பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளை திலீப் டி ஷஹானி ஆய்வு செய்து, அப்துல் கலாம், ரவீந்திரநாத் தாகூர் படங்களை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவதற்கு மத்திய அரசுக்கு அவர் பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் புதிதாக வரும் ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்கள் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக மற்ற தேசிய தலைவர்களின் படங்கள் இடம் பெறலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது முற்றிலும் தவறு. இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்ற எந்த ஒரு திட்டமும் தற்போது இல்லை.” என்று தெரிவித்துள்ளது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0