கடலூர் மாவட்டம் கருப்பு தங்கச் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைந்துள்ள என்.எல்.சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளத் தகுதியான சங்கத்தைத் தேர்வு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
2001ஆம் ஆண்டுக்கு முன்பு தொழிலாளர்களின் குறைகள், கோரிக்கைகளைப் பற்றி நிர்வாகத்துடன் பேசி முடிவு செய்வதற்கு லெட்டர் பேடு சங்கங்கள் எல்லாம் கலந்து கொண்டுவந்தன. அதைப் பயன்படுத்திக்கொண்டு நிர்வாகத்துக்கு ஆதரவான சில சங்கங்களை உயர் அதிகாரிகள்உருவாக்கியிருந்தார்கள் .
நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல தகுதியான சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யவேண்டும் என்று நீதிமன்றம் படியேறி ஐபிஎப், ஏஐசிடியூ, சிஐடியூ சங்கத்தினர்.உத்தரவு பெற்று வந்தனர்.
நான்கு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் ரகசிய வாக்கெடுப்பில் கம்யூனிஸ்ட் சங்கங்கள் வெற்றிபெற முடியவில்லை, தொ.மு.ச, அ.தொ.மு.ச, பாமக சங்கம் வெற்றிபெற்று வந்தது. கடந்த தேர்தலில்தான் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிஐடியூ அதிகமான வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தை தொமுச பிடித்தது.
நெய்வேலியில் உள்ள 7150 வாக்காளர்கள், சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற வெளி மாநிலங்களில் பணிசெய்யும் 287 பேர் என மொத்தம் 7437 வாக்காளர்கள் உள்ளனர்.
தொமுச மற்றும் சிஐடியூ உட்பட ஏழு சங்கங்கள் போட்டியிட்ட தேர்தலில் ஆளுங்கட்சி சங்கமான அதொமுச ரினிவல் செய்யாததால் தேர்தலில் போட்டியிட முடியாமல் கனரக வாகன சங்கத்தில் போட்டியிட்டார்கள். விசிக சங்கமான எல்.எல்.எஃப் பதிவு செய்யாததால் அறிவார் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கத்தில் இணைந்து போட்டியிட்டார்கள்.
ஆளுங்கட்சி ஓட்டுக்கு 2500 ரூபாயும் , எதிர்க் கட்சியான திமுக சங்கமான தொமுச ஓட்டுக்கு 1000 ரூபாயும் கொடுத்திருக்கிறார்கள். விசிக ரூ 200 பாமக ஓட்டுக்கு ரூ 500 கொடுத்திருக்கிறார்கள், சிஐடியூ,வினர் வாக்காளர்களுக்குப் பணம் ஏதும் கொடுக்கவில்லை. சிஐடியூ சின்னம் 2, தொமுச சின்னம் 7, அதொமுச சின்னம் 4 ஆகும்.
நேற்று (பிப்ரவரி 25) தெர்மல், சுரங்கம் உட்பட 11 இடத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு காலை 5.00 மணிக்கு துவங்கி மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. தபால் ஓட்டு 231, பூத்தில் பதிவானது 6,835 மொத்தம் 7,066 வாக்குகள் பதிவாகி இருந்தது.
மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக இருந்தது. தொமுசவிலிருந்து பிரிந்துபோன முன்னாள் தொமுச பொதுச்செயலாளர் கோபாலன் தலைமையில் ஒரு சங்கத்தை உருவாக்கித் தேர்தலில் போட்டியிட முயன்றார்கள். கடைசி நேரத்தில் சட்ட விதிகளின்படி அனுமதிக்காததால் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று முன்னாள் தொமுச பொதுச்செயலாளர் வாக்கு எண்ணிக்கைக்குத் தற்காலிக தடை வாங்கியுள்ளார். தற்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஆளுங்கட்சியின் சதி என்கிறார்கள் தொழிலாளர்கள்.
என்.எல்.சி தேர்தலில் சட்டமன்றம் தேர்தலைப் போல் ஆர்வம் காட்டினார்கள் அரசியல்வாதிகள். கடந்த ஒரு மாத காலமாகவே அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு சுழன்று வந்தார்கள், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன், எம்.எல்.ஏ.சபா ராஜேந்திரன் மற்ற நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வணங்காமுடி**�,