xபுதுவிதமாக சைபர் மோசடி: எச்சரிக்கும் போலீஸ்!

Published On:

| By admin

அதிகரித்து வரும் மோசடி போன் அழைப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

டிஜிட்டல் உலகத்தில் தினசரி மோசடி நடைபெறுவது என்பது தொடர்கதையாகிவிட்டது. மோசடி நபர்கள், சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு ஒடிபி அனுப்பி, வங்கியிலிருந்து பேசுகிறோம் எனக் கூறி கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஷிங் (தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் மோசடி) எனப்படும் போன் கால் மூலம் ஓடிபி பெறுவது மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்கள் கேட்பது என்ற நிலையிலிருந்து முன்னேறி மோசடி நபர்கள் தற்போது பல்வேறு உத்திகளைக் கையாண்டு பொதுமக்களை ஏமாற்றத் துவங்கியுள்ளனர்” என்று சென்னை காவல் துறை கூறியுள்ளது.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று (ஏப்ரல் 8) வெளியிட்ட அறிவிப்பில், “கேஸ் மானியம் உங்கள் கணக்கிற்கு வரும், எனவே வங்கி கணக்கு நம்பர் கொடுங்கள் என்றும், போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது மொபைல் எண்ணை மாற்றி உங்கள் எண்ணை கொடுத்துவிட்டேன், உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும் அதை கொடுக்குமாறு கூறி போன் அழைப்புகள் வரும். அந்த மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதே போல் பான் கார்டு மற்றும் கேஒய்சி விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் மொபைல் எண் பிளாக் செய்யப்படும் அல்லது வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்று வரும் குறுஞ் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப கூடாது. அந்த குறுஞ்செய்திகளில் வரும் லிங்க்கை கிளிக் செய்ய கூடாது. அதிலுள்ள மொபைல் எண்ணுக்குக் கால் செய்ய கூடாது.

மேலும் அமேசான், பகுதி நேர வேலை,க்ரிடோ ட்ரேடிங், முதலீடு என்பது போல் வாட்ஸ் அப்பிலோ, டெலிகிராமிலோ வரும் மெசேஜ்களை நம்பி யாருக்கும் பணம் அனுப்ப கூடாது.
ஓஎல்எக்ஸ் போன்ற செயலிகளில் பொருளை விற்கும் போது க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யச் சொன்னால் அதனைத் தவிர்த்துவிட வேண்டும். லோன் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம்.
பொதுமக்கள் முகம் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம். வாட்ஸ் அப் குழுவிலோ, டெலிகிராமிலோ தொடர்பு கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவர்களின் பேச்சை நம்பி பணம் அனுப்பவோ கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பவோ கூடாது.
பொதுமக்கள் தாங்கள் நேரில் பார்க்காத, நன்றாகத் தெரியாத நபர்களின் பேச்சைக் கேட்டு பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் எவரேனும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற ஹெல்ப் லைனுக்கு போன் செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share