நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு 4 மாநில முதல்வர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பாகக் கடலூரில் இன்று (ஆகஸ்ட் 27) பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன் என்று அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களும் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தேர்வுகளை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதாலும், சில மாதங்களில் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையிலுமே ஜூன் 2020 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், நாடு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பெருந்தொற்று மட்டுமின்றி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றால், கிராமப்புறங்களும், மலைப் பகுதிகளும் பிற முக்கியப் பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. விமானம், ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லாததுடன், ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது.
மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில முதலமைச்சர்கள் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். மேலே விளக்கப்பட்ட கடுமையான சிக்கல்களையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது ஒருமித்த நிலைப்பாடு, நாடு முழுவதும் உள்ள மாணவர் மற்றும் பெற்றோரின் குரலுக்கு வலுசேர்ப்பதாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,