நீட் ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் இர்ஃபானின் தந்தை போலி மருத்துவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தரகர்கள் உட்பட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இர்ஃபான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக அவரது சான்றிதழ் சரிபார்ப்பின் போது தெரியவந்துள்ளது.
மாணவர் மொரீசியஸ் நாட்டுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில் அவரது தந்தை முகமது சஃபியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இர்ஃபான் நேற்று (அக்டோபர் 1) சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்தச்சூழலில், இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கையைத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசராஜூ எடுத்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க மாணவரின் தந்தை முகமது சஃபி போலி மருத்துவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர் மருத்துவ படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வாணியம்பாடி மற்றும் வேலூரில் இரு கிளினிக்குகளை வைத்து நடத்தி வந்திருக்கிறார் என்பது சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
�,