நீட் தேர்வு முடிவு வெளியீடு: முடங்கிய இணையதளம்!

Published On:

| By Balaji

2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், சில நிமிடங்களிலேயே தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியது. அதனால் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய தேர்வு கொரோனா பாதிப்பு எதிரொலியாக இருமுறை ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு எழுதினர். நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தனது இணையதள பக்கம் மூலம் தெரிவித்திருந்தது.

www.ntaneet.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் நீட் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு மேல், முடிவை காணும் வகையில், மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதி, பாதுகாப்பு எண், குறிப்பிடும் ரிசல்ட் பேஜ் தோன்றியது.

எனினும் மாணவர்கள் ஒரே சமயத்தில் இணையதளத்தை பார்க்க முயன்றதால், தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியது. இதனால், மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்ப்பதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதோடு, மெரிட் லிஸ்ட் மாநில வாரியான தேர்ச்சிஎன எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share