rஅரசுப் பணிகளுக்கு ஒரே பொது தகுதித் தேர்வு!

Published On:

| By Balaji

மத்திய அரசுப் பணிகளுக்கு, பொது தகுதித் தேர்வு நடத்தத் தேசிய ஆள்தேர்வு முகமை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (ஆகஸ்ட் 19) ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்தேர்வு நடைமுறைகளில் நிலை மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை உருவாக்கும் வகையில் தேசிய ஆள்தேர்வு முகமை ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

**ஆள்தேர்வில் சீர்திருத்தம் **

தற்போது, வங்கிப்பணி, ரயில்வே பணி உட்பட மத்திய அரசின் பல்வேறு துறை பணிகளுக்கு அவற்றுக்கென உள்ள தேர்வு அமைப்புகள் தனித்தனியாகத் தேர்வு நடத்துகின்றன. சராசரியாக ஒவ்வொரு தேர்விலும் 2.5 கோடி முதல் 3 கோடி பேர் வரை பங்கேற்கிறார்கள். வேலை தேடுபவர்களும் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து வருகிறார்கள். தேர்வு கட்டணத்தையும் தனித்தனியாகச் செலுத்துதல், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளை எழுத வேண்டி இருப்பதால், பயண செலவும் அதிகரித்தல் ஆகியவை விண்ணப்பதாரர்களுக்குச் சுமையாக இருந்து வந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே ஆள்தேர்வு முகமை அமைக்கத் திட்டமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம், விண்ணப்பதாரர்கள் ஒரு முறை தேர்வு எழுதிய பிறகு எந்தவொரு அல்லது இந்த அனைத்து ஆள்தேர்வு முகமைகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், பி மற்றும் சி பிரிவில் வரும் (தொழில் நுணுக்கம் சாராத) பணிகளுக்கு மாணவர்கள் பட்டியலை முதல்நிலையில் தயாரித்தலுக்கு, **பொதுவான தகுதித் தேர்வை (சி.இ.டி. எனப்படும் செட்) தேசிய ஆள்தேர்வு முகமை (என்.ஆர்.ஏ.) என்ற பன்முக முகமை நடத்தும். இந்த முகமையில் ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர்.** மத்திய அரசுப்பணியாளர் தேர்வில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை அமல் செய்தலுக்கான நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பாக என்.ஆர்.ஏ.வை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது.

**தேர்வு மையங்களுக்கு எளிதாகச் செல்லலாம்**

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையம் அமைப்பதன் மூலம், தொலைதூரப் பகுதிகளில் உள்ள விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத உதவி செய்வதாக இருக்கும். வளரும் உத்வேகத்தில் உள்ள 117 மாவட்டங்களில் தேர்வு மையங்களை உருவாக்குவதற்குச் சிறப்புக் கவனம் தரப்படுவதால், தாங்கள் வாழும் பகுதிக்கு அருகில் தேர்வு மையம் அமையும் வசதி கிடைக்கும். செலவு, முயற்சி, பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் விண்ணப்பதாரர்கள் பயன் பெறுவார்கள். தொலைதூர கிராமங்களில் வாழும் விண்ணப்பதாரர்களும் இத் தேர்வை எழுத உத்வேகம் கிடைக்கும் என்பதால், மத்திய அரசுப் பணிகளில் அவர்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

**விண்ணப்பதாரர்களுக்குப் பயன்**

நிதி மற்றும் இதர சுமைகளைக் கருத்தில் கொண்டு, எந்தத் தேர்வுகளை எழுதலாம் என்று கிராமப்புற மாணவர்கள் முடிவு செய்ய வேண்டியுள்ளது. என்.ஆர்.ஏ. முறை வந்தபிறகு, ஒரு தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், பல பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறமுடியும். ஒரே தேர்வாக இதை நடத்தும்போது விண்ணப்பதாரர்களின் நிதிச் சுமை குறையும்.

**மதிப்பெண்கள் கணக்கீடு**

விண்ணப்பதாரர்கள் பெறக்கூடிய மதிப்பெண்கள், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 3 ஆண்டுகளுக்குச் செல்லும். செல்லத்தக்க மதிப்பெண்களில், அதிகபட்சமாக உள்ள மதிப்பெண் அந்த விண்ணப்பதாரரின் தற்போதைய மதிப்பெண்ணாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தேர்வை எத்தனை முறை எழுதலாம் என்பதற்கான வரையறை எதுவும் கிடையாது. வயது வரம்புத் தகுதி உள்ள வரையில் இத்தேர்வை எழுதலாம். அமலில் இருக்கும் அரசுக் கொள்கைகளுக்கு ஏற்ப எஸ்.சி. / எஸ்.டி. / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்படும்.

எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆள் தேர்வு வாரியங்கள் மற்றும் ஐ.பி.பி.எஸ். சார்பில் நடத்தப்படும் பட்டதாரி, மேல்நிலை (12 ஆம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் மெட்ரிகுலேட் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) என்ற மூன்று நிலைகளில் தொழில் நுணுக்கம் அல்லாத பணிகளுக்கான பொது தகுதித் தேர்வுகளை என்.ஆர்.ஏ. நடத்தும். செட் (ced- common eligibility test) மதிப்பெண் அளவின் அடிப்படையில் முதல்நிலைத் தேர்வு முடிந்த பிறகு, சிறப்புத் தேர்வு முறைகளின் (நிலை 2, நிலை 3) அடிப்படையில் அந்தந்த ஆள்தேர்வு முகமைகள் ஆள் சேர்க்கைப் பணிகளைத் தொடரும். இந்தத் தேர்வுக்கான பாடங்கள் பொதுவானதாகவும், தரநிலைப் படுத்தியதாகவும் இருக்கும். இப்போது வெவ்வேறு பாடங்களைக் கொண்ட வெவ்வேறு தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு எதிர்கொள்ளும் சிரமங்களைப் பெருமளவு குறைப்பதாக இது இருக்கும்.

**பல மொழிகள்**

செட் தேர்வு பல மொழிகளில் நடத்தப்படும். ஆரம்பத்தில் இத் தேர்வின் மதிப்பெண்களை மூன்று முக்கிய ஆள்தேர்வு முகமைகள் பயன்படுத்தும். இருந்தபோதிலும், மத்திய அரசின் வேறு ஆள்தேர்வு முகமைகளும் இந்த மதிப்பெண்களைக் காலப்போக்கில் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், அரசு மற்றும் தனியார் துறைகள் பலவும், விருப்பத்தின் அடிப்படையில், இதை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. எனவே, நீண்டகால நோக்கில், மத்திய அரசு, மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள், பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளின் ஆள்தேர்வு முகமைகளும் செட் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

ஒரே தகுதித் தேர்வு என்பதால், ஆள்தேர்வு நடைமுறையைப் பூர்த்தி செய்வதற்கான காலம் கணிசமாகக் குறையும். இரண்டாம் நிலை தேர்வு எதுவும் இல்லாமல், செட் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆள்தேர்வை செய்யப் போவதாக சில முகமைகள் ஏற்கெனவே தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளன. உடல் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனைகள் மட்டுமே கூடுதலாக மேற்கொள்ளப்படும். இதனால் வேலை கிடைப்பதற்குக் காத்திருக்கும் காலம் பெருமளவு குறைவதுடன் இளைஞர்களுக்குப் பயன் தருவதாக இருக்கும் என்று மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது

தேசிய ஆள்தேர்வு முகமையை உருவாக்க அரசு ரூ.1517.57 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share