�தூத்துக்குடியில் நிலக்கரி தட்டுப்பாடு: இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்!

Published On:

| By admin

கோடையில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து யூனிட்டுகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9,000 டன் ஆகும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 மற்றும் 4ஆவது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 1, 2 மற்றும் 5ஆவது யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மூன்று யூனிட்டுகளிலும் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share