இன்று நவராத்திரி தொடங்குகிறது. பெண்களின் உள்ளம் கவர்ந்த பண்டிகைகளில் முதல் இடம் பிடிப்பது நவராத்திரி. வீட்டை தோரணங்களால் அலங்கரித்து, எழில் கொஞ்சும் கொலு வைத்து, அக்கம்பக்கம், நட்பு, உறவு என அழைப்புவிடுத்து, கொண்டாட்டமும் குதூகலமுமாக… ஒன்பது நாட்கள், ஒரு நிமிடமாக பறந்து விடும் அதிசயத்துக்கு ஈடு இணை கிடையாது!
இந்த நவராத்திரி சமயத்தில், இல்லத்தில் சிறப்பாக தயாரித்து, அம்மனுக்கு படைத்து, வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி, நமக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களின் பாராட்டு மழையில் நனைய வைக்கும் இந்த வெள்ளை மொச்சை சுண்டல்.
**என்ன தேவை?**
காய்ந்த மொச்சை – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
**எப்படிச் செய்வது?**
மொச்சையை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் வேகவைத்த மொச்சை, உப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால், நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவலாம்.�,