இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியில் எம்.டெக். பாடப்பிரிவுகள் நடைபெறுகின்றன. மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதனால்,எம்.டெக். பிரிவில் உயிரி தொழில்நுட்பவியல், கணக்கீட்டு தொழில்நுட்பம் ஆகிய 2 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அண்ணா பல்கலையில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5 சதவீதத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் (EWS) 10 சதவீத இடஒதுக்கீட்டின்படி இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த இடஒதுக்கீட்டை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. தமிழகஅரசின் அனுமதியின்றி,அண்ணா பல்கலைக்கழகம் தன்னிச்சையாக அதனை அமல்படுத்தி இருக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ,மாணவியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி புகழேந்தி முன்பு நடந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன், தமிழகஅரசு உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை ஏற்கவில்லை என தெரிவித்தார். இந்த இடஒதுக்கீடானது, மத்திய அரசு வேலைகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும் அதற்கான மாநில அரசின் தீர்மானத்தையும் சமர்ப்பித்தார்.
”மாநில அரசு அமல்படுத்தாத நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது ஏன்? ஏன் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்” என்று நீதிபதி புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றி செயல்படுத்த விரும்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கொள்கைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பின்பற்றப்பட்டதைப் போல 49.5% இடஒதுக்கீட்டை ஏன் பின்பற்றவில்லை என்பதற்கும், இந்த ஆண்டு 10% ஒதுக்கீடு ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்கும் வெள்ளிக்கிழமைக்குள் (மார்ச் 12)அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
**வினிதா**
�,