அண்ணா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட எம்.டெக் பட்ட மேற்படிப்புகளுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சித்ரா மற்றும் குழலி ஆகிய மாணவிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணையிலிருந்து வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப் போகிறீர்கள்? இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி அடுத்த ஆண்டு மத்திய அரசு இட ஒதுக்கீட்டைப் பின்பற்றலாமா? இந்த படிப்பை பல்கலைக் கழகம் தொடர்ந்து நடத்த என்ன செய்வது? இந்த வழக்கு படிப்பிலிருந்து இட ஒதுக்கீடு பிரச்சினைக்குத் திசைமாறிச் செல்கிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை 69 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் 49.9 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் ஒப்புதல் வழங்கி உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
**-பிரியா**�,