இன்டர்நெட் இல்லாமலே பணப்பரிவர்த்தனை: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

Published On:

| By Balaji

டிஜிட்டல் முறையில் ஆஃப்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதிக்கு பரிசோதனை முயற்சியில் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தற்போது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கு இன்டர்நெட் இணைப்பு அவசியம். இணையதளம் அல்லது மொபைல் வாயிலாக இன்டர்நெட் வசதியுடன் உடனடி பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால், இணையதள வசதி இல்லாத இடங்களில் டிஜிட்டல் சேவைகள் நடைபெறுவது சாத்தியமில்லாமல் உள்ளது. பல பின்தங்கிய கிராமங்களில் தற்போதும் இன்டர்நெட் சேவைகள் கிடைக்கப் பெறாத நிலை உள்ளது.

உலக வங்கியின் 2019ஆம் ஆண்டு தரவுகளின்படி நமது நாட்டில் 41 சதவிகிதம் மக்களிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளது. இந்த வசதி கிடைக்காத பிற மக்களுக்கும் டிஜிட்டல் வசதி கிடைக்க உதவிடும் வகையில் இந்த வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதி மூலம் ஒரு தடவைக்கு அதிகபட்சமாக 200 ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். ஒரு மாதத்துக்கு 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை இணையதள வசதி இல்லாமல் வாடிக்கையாளர் பெறமுடியும். கடன் அட்டை, வாலட், மொபைல் செயலிகள் போன்ற வகைகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

இந்த வசதியைக் கோரும் வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி, பின் நம்பர் செலுத்துவது போன்ற எந்த சரிபார்க்கும் வழக்கமும் இருக்காது. பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட பிறகு எஸ்எம்எஸ் மூலம் பணம் செலுத்துபவருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

இதுபற்றிய பரிசோதனைகளை ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 2020ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. அந்தச் சோதனைகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை வழங்கும் முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வசதி மூலம் நாட்டில் உள்ள அனைவருக்கும் டிஜிட்டல் வசதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் டிஜிட்டல் துறையில் அதிக அளவு முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் புதிய பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளருக்கு பிரச்சினை ஏற்பட்டால் இந்த வசதியை தரும் நிறுவனத்திடம் புகார் அளிக்கலாம். ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் உள்ள புகார் மையத்திலும் புகார் அளிக்கலாம். இந்தப் புதிய முயற்சி டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்களிப்பாக நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் வங்கியாளர்கள்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share