மெக்ஸிகோ நகரின் மத்திய பிளாசாவில் 14,299 பேர் கலந்துகொண்ட குத்துச்சண்டை வகுப்பு உலக சாதனை படைத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மாஸ்கோவில் 3,000 பேர் கொண்டு நடத்தப்பட்ட குத்துச்சண்டை வகுப்புதான் இதற்கு முந்தைய உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மெக்ஸிகோ நகர அரசாங்கத்தால் ஜோகாலோ பிளாசாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக ராக்கி பால்போவா புகழ் அமெரிக்க நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் மற்றும் குத்துச்சண்டை வீரர் சவுல் கனெலோ அல்வாரெஸ் ஆகியோரை வைத்து விளம்பரம் செய்யப்பட்டது. இந்த உலக சாதனையை கின்னஸ் உலக சாதனை குழு, குத்துச்சண்டை வகுப்பில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையைச் சரிபார்த்து உறுதிப்படுத்தியது.
இந்த வகுப்பு தொடங்குவதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். முதலில் டாய்-சீ வகுப்புடன் ஆரம்பித்தது. பின்னர் அடிப்படை குத்துச்சண்டை அசைவுகளை பலவிதமான அடிகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள், மெக்ஸிகன் கொடியின் வண்ணங்களைக் குறிக்கும் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு டி-ஷர்ட்டுகளை அணிந்து பயிற்சி செய்தனர்.
30 நிமிடங்கள் நடந்த இந்த உலக சாதனை குத்துச்சண்டை வகுப்பை உலக சாம்பியன் மரியானா பார்பி ஜுவாரெஸ் உட்பட 15 பிரபலமான மெக்ஸிகன் குத்துச்சண்டை வீரர்கள் கற்பித்தனர். இந்த உலக சாதனை குறித்து மெக்ஸிகோ நகரத்தின் மேயர் கிளாடியா ஷீன்பாம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மெக்ஸிகோ நகரில் இந்த உலக சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஸ் மற்றும் பொதுமக்களுக்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
.