தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 14 ஆம் தேதி ஆயுத பூஜையும், 15ஆம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சனி,ஞாயிற்றுக் கிழமை வருவதால், மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதனால், சென்னையில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்றிலிருந்தே செல்ல இருக்கின்றனர். மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று(அக்டோபர் 13) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”தொடர் விடுமுறை நாட்களையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று (13) நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று மட்டுமே. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,