தமிழகத்தில் விலை உயர்வினால் பலதர மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலையை 2 ரூபாயாக உயர்த்தினர். இது ஓரளவுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்க தொடங்கி வரும் நிலையில் கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி, குடியாத்தம், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 50 முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் என செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து தீப்பெட்டி மூலப்பொருட்கள் விலை அதிகரித்து வருவதால் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வரும் நிலை உள்ளது. எனவே ஏப்ரல் 6 முதல் 17ஆம் தேதி வரை ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்வது என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த 31ஆம் தேதியன்று முடிவெடுத்தது. மேலும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 30 கோடி ரூபாய் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.