குமரி மீனவர்களை சிறைபிடித்த மகாராஷ்டிர மீன்வளத் துறை!

public

இலங்கை கடற்படையைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மீன்வளத் துறை அதிகாரிகளும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தமிழக மீனவர்களை கைது செய்வது, படகுகளை ஏலம் விடுவது என தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை வரும் 25ஆம் தேதிவரை யாழ்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை கடற்படைதான் மீனவர்களை அச்சுறுத்தி வருகிறது என்றால், தற்போது மகாராஷ்டிர மீன்வளத் துறையும் அனுமதியின்றி வந்தததாகக் கூறி மீனவர்களையும்,படகுகளையும் சிறை பிடித்துள்ளனர்.

கடந்த 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்த 10 மீனவர்கள் ஜெகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகுகள் மூலம் கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது படகின் ஸ்டீரிங் உடைந்து பழுது ஏற்பட்டது. இதனால் மீனவர்களால் படகை இயக்க முடியாமல் தவித்து வந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் அவர்களுக்கு உதவினர். தொடர்ந்து உடைந்த ஸ்டீரிங்கை சரிபார்க்க நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரெத்தினகிரி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு உடைந்த பாகத்தை சரி செய்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அனுமதியின்றி துறைமுகத்துக்கு வந்ததாகக் கூறி, மகாராஷ்டிர மீன்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், அனுமதியின்றி துறைமுகத்துக்கு வந்ததற்கு எங்களையும், படகுகளையும் பிடித்து வைத்துள்ளனர். பிடிக்கப்பட்ட மீன்களை விற்கப்போவதாக தெரிவித்துள்ளனர். அதோடு விசைப்படகுகளை ஏலம் விடப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். பிப்ரவரி 13ஆம் தேதி இரவு எங்களை சிறைபிடித்தனர். உடனடியாக, தமிழக அரசு இதில் தலையிட்டு எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகளை ஏலம் விடுவதற்கு முன்பாக, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *