தமிழர் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜனவரி 14) தமிழகம் வந்து சென்றார்.
மதுரை, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காலை 11:45 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்குச் சென்றார். விஐபிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து ராகுல், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி ஆகியோருடன் விளையாட்டைப் பார்த்து ரசித்தார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையினை கிராமத்து மக்களோடு இணைந்து கொண்டாட தென்பலஞ்சி கிராமத்துக்குச் சென்றார். அங்கு அவரை, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். பொங்கல் வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர், பின் கிராம மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது அவருடன் பேச வந்த மூதாட்டி ஒருவர், அன்னை இந்திராவின் பேரன் என ராகுலைக் கொஞ்சியிருக்கிறார். அவருடன் ராகுல் புகைப்படம் எடுத்துள்ளார்.
ராகுலின் வருகையால் தென்பலஞ்சி கிராம மக்கள் உற்சாகமடைந்தனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தென்பலஞ்சியில் இருந்து கார் மூலம் 2.30 மணிக்கு விமான நிலையம் வந்த அவர் 2.40 மணிக்குத் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
**-பிரியா**�,