சத்குரு ஜகி வாசுதேவ்
**கேள்வி:** நான் வக்கீலாக இருக்கிறேன். விவாகரத்து கோரி என்னிடம் இளம் தம்பதிகள் வருவது அதிகரித்துவிட்டது, கலங்கிப்போகிறேன். காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக் கொண்டதுதானா? மோகம் தீர்ந்ததும் காதலும் காய்ந்துவிடுகிறதா? அல்லது இளைஞர்களிடம் புரிந்துகொள்ளுதல் குறைந்துவிட்டதா?
**சத்குரு:** ஆண், பெண் இருவருக்கும் அடுத்தவர்மீது பரஸ்பர ஆர்வம் பிறக்காவிட்டால், அடுத்த தலைமுறை என்று ஒன்று இருக்காது. இனவிருத்தி இடைவிடாமல் நடைபெறுவதற்காக இயற்கை நிகழ்த்தும் போதை விளையாட்டு இது. இனக்கவர்ச்சி எனும் போதை உடலில் ஏறி இருக்கும்போது, தாமாகவே ஆணும் பெண்ணும் நெருங்கி வருகிறார்கள்.
முழுமையான ஈடுபாடு கொள்ளாமல், கட்டாயத்தின் பேரில் எது நடந்தாலும், அதில் எனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்றுதான் மனம் கணக்கிடும்.
சமூகத்தில் யாரை புத்திசாலி என்று கருதுவீர்கள்? குறைவாகக் கொடுத்து, அதிகம் பெறத் தெரிந்தவரைத்தானே? கடைவீதியில் துவங்கி கல்யாணம் வரை கொடுப்பதைக் குறைத்து, பெறுவதை அதிகமாக்கிக்கொள்ள முடியுமா என்று பார்ப்பதில், உறவுகளிலும் கணக்கு நுழைந்துவிடுகிறது.
காதல்வயப்பட்டு உணர்ச்சிகளால் ஆளப்படும் நேரத்தில், இந்த ஆதாயக் கணக்குகள் முக்கியத்துவம் இழக்கின்றன. உணர்ச்சி வேகத்தில் எண்ணங்கள் கடத்தப்படுகின்றன. என்ன கிடைக்கிறது என்பதைவிட, என்ன கொடுக்கிறோம் என்பதுதான் அப்போது முக்கியமாகத் தோன்றுகிறது. அதே உணர்ச்சி திருமணத்திற்குப் பின்பும் தீவிரமாகத் தொடர்ந்தால் உறவும் சுகமாகத் தொடரும்.
கடைவீதியிலோ, பக்கத்து வீட்டுக்காரரிடமோ கொடுக்கல் வாங்கல் திருப்தி இல்லாமல் போனால், அவர்களுடன் பழகுவதை நிறுத்திவிடலாம். ஆனால், கல்யாணம் என்ற பெயரில் வாழ்க்கைத் துணை என்று வந்தவரோடு, கூண்டில் அடைபட்ட உணர்வு அல்லவா இங்கு மேலோங்கி இருக்கிறது?
ஏதோ ஒருவிதத்தில் ஏமாற்றப்பட்டு, நீங்கள் அதிகம் கொடுப்பதாகவும், பதிலுக்குக் குறைவாகப் பெறுவதாகவும்தான் மனம் நினைக்கிறது. இதிலிருந்து தப்பிக்கமுடியாமல் தள்ளாட்டம் ஏற்படுகிறது.
உங்களை யாரோ சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நினைத்துவிட்டாலே, அப்புறம் நிம்மதி ஏது?
திருமணம் முடிந்த கையோடு அந்தக் கணவனும் மனைவியும், அடுத்தவரின் அலமாரியைத் திறந்து பார்க்கக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். 30 வருடங்கள் கழிந்தன. கணவனின் அலமாரி திறந்திருப்பதைக் கவனித்த மனைவி ஆர்வம் பொறுக்காமல், உள்ளே எட்டிப்பார்த்தாள். அங்கே 12 ஆயிரம் ரூபாய் பணமும், மூன்று மெழுகுவர்த்திகளும் இருந்தன.
“மெழுகுவர்த்தி எதற்கு?” என்று கேட்டாள் மனைவி.
“நான் உனக்குத் துரோகம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு மெழுகுவர்த்தி வாங்கிவைப்பது வழக்கம்” என்றான் கணவன்.
30 வருடங்களில் மூன்றே முறைதான் தவறி இருக்கிறானா? மன்னிக்கத் தயாராக இருந்தாள் மனைவி.
“இந்தப் பணம்?” என்று கேட்டாள்.
“அதுவா? 100 மெழுகுவர்த்தி சேர்ந்துவிட்டால், அதைப் பாதிவிலைக்கு கடைக்காரனிடமே கொடுத்துவிடுவேன். அப்படிச் சேர்ந்த காசு அது” என்றான் கணவன்.
**பெயரளவிலான உறவு**
காதல் இன்றி, மனைவி, கணவன் என்று வெறும் பெயரளவில் உறவுமுறை கொண்டு ஒருவருடன் வாழ்வது சித்ரவதையானது. நீங்கள் ஒருவருடன் நெருக்கமாக இணைந்து வாழ்வதில் உள்ள சுகம் காரணமாக, அவர்மீது வைத்திருக்கும் மதிப்பு காரணமாக, அன்பு காரணமாகச் சேர்ந்து இருப்பதில் அர்த்தம் உள்ளது. சமூகத்திற்காக மட்டுமே ஒரு நபருடன் நீங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டியிருந்தால், அது நரகம்தான்.
ஒருவன் ரபியிடம் (சர்ச் ஃபாதர் போல்) வந்தான், “என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், தெருவில் செல்கையில் மற்ற அழகான பெண்களைக் காண்கையில் அவர்களால் தூண்டப்படுகிறேன். தவிக்கும் மனதை என்ன செய்வது?” என்று கேட்டான்.
ரபி சொன்னார், “அபார உணவு வகைகளைப் பார்த்துப் பசியை எங்கே வேண்டுமானாலும் வளர்த்துக்கொள். ஆனால், உணவுக்கு வீட்டுக்குப் போய்விடு”.
**புரிந்துகொள்ளுதலும் இணைத்துக்கொள்ளுதலும்!**
“யோகா கற்றதில் வாழ்க்கையையே புரிந்துகொண்டு விட்டேன். ஆனால், என் மனைவியைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று என்னிடம் ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார்.
அடுத்தவரைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள முற்படுவது மாபெரும் போராட்டம். அடுத்தவருடைய உணர்ச்சிகள், எண்ணங்கள் எல்லாவற்றையும் உண்மையில் நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தீர்கள் என்றால் அவர்கள் மிரண்டுவிடுவார்கள். உங்களைக் கண்டாலே அச்சம்கொள்வார்கள்.
புரிந்துகொள்வதற்கு அல்ல உறவு. நீங்கள் அவரை முற்றிலுமாய் புரிந்துகொள்ள வேண்டும் என்று உங்கள் துணை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. உங்களில் ஒரு அங்கமாக அவரை நீங்கள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்.
மனிதனின் அபரிமிதமான சக்தியில் 80 – 90 % பாலின குழப்பங்களில் விரயம் ஆகிறது. ஒருவர் இதுதான் சரி என்கிறார். இன்னொருவர் “இது தகாது, தவறு” என்கிறார். எதுவானாலும், வாழ்வில் மிகச் சிறிய பங்கு வகிக்க வேண்டிய பகுதி அது.
இந்தக் குழப்பங்களிலிருந்து வெளியே வருவது எப்படி? ஒரு நாளின் 24 மணி நேரத்திலும் “நான் ஆண்” என்றோ, “நான் பெண்” என்றோ ஓர் அடையாளத்தை நீங்கள் சுமந்துகொண்டே இருக்கத் தேவை இல்லை. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலும், சில அவசியமான கட்டங்களிலும் மட்டும் பெண்ணாகவோ ஆணாகவோ உங்கள் பாத்திரத்தை அடையாளப்படுத்திக் கொண்டால் போதுமானது.
மற்ற நேரங்களில், ஓர் உயிராக மட்டும் உங்களைக் கருதிச் செயல்பட்டால் போதும். ஆண், பெண் என்ற அடையாளங்களுடன் செயல்படுகையில் சில கட்டாயங்களை நீங்களே விதித்துக்கொண்டுவிடுவீர்கள். இரண்டு “கட்டாய சுவர்”கள் சேர்ந்து வாழ முடியாது. ஆனால் இரண்டு உயிர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல், சேர்ந்து வாழ முடியும்.
சொல்லப்போனால் உங்களை ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்தாமல், அந்தக் குறுகலான வரையறைகளைத் தாண்டி நீங்கள் செயல்படும்போதுதான், உங்கள் திறன் அதன் உச்சத்தில் வெளிப்படும். நீங்கள் நினைத்துப்பார்க்காத விஷயங்கள்கூட உங்களுக்குச் சாத்தியப்படும்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”