கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், “கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சமும் தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.50ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும். சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10 லட்சமும், வாழைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும்” என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எட்டுவழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தும்போது தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது போல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வரும் நவம்பர் 26ஆம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.�,