கொரோனா ஊரடங்கிற்குப் பின் பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கணினி, மொபைல் வசதிகளைப் பெற முடியாது என்பதால், அந்த மாணவர்களுக்காக ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதிசெய்ய மாவட்ட, வட்டம், ஊராட்சி அளவில் குழுக்களை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று(நவம்பர் 13) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 18 மாதங்களுக்குப் பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாகவும், வேலை இழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்துவந்த அரசுப் பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
பின்னர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக அரசின் ஆலோசனைகளைக் கேட்டு தெரிவிக்க தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
அன்றைய தினம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக இந்த இரு பிரச்சினைகள்தாம் உள்ளனவா, வேறு பிரச்னைகள் உள்ளனவா என்பதைத் தெரிவிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
**-வினிதா**
�,