மேல்முறையீடு: நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி!

Published On:

| By Balaji

நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்து இங்கிலாந்தில் உள்ள லண்டனுக்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி, போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த லண்டன் மாஜிஸ்திரேட் கோர்ட் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சமீபத்தில் அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி நிரவ் மோடி சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிரவ் மோடி, இந்தியாவுக்குச் சென்றால் தற்கொலை செய்து கொள்ள அதிகம் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி மார்டின் சாம்பர்லின் நாடு கடத்தலை எதிர்த்து, நிரவ் மோடி மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது நிரவ் மோடியை நாடு கடத்தும் மத்திய அரசின் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால், அவர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு முயற்சி செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel