ஆட்டோக்கள் இயக்கத்திற்கு அனுமதியளிக்கப்படுமா?

Published On:

| By Balaji

ஆட்டோக்கள் இயக்கத்திற்கு அனுமதியளிக்க வேண்டுமென தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அமலில் இருக்கும் ஊரடங்கால் அன்றாடப் பணியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதிக்குப் பிறகு நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பல நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ அவசரத் தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோ, கால் டாக்ஸிகளை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது இரண்டு மாதங்களாக வருமானமே இல்லாமல் துன்பத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆகவே, தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ஆட்டோக்கள் இயக்கத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து அறிவிக்கவேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலன் கருதி ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, அதுபோலவே ஆட்டோக்கள் இயக்கத்திற்கும் அனுமதி தர வேண்டுமென ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்துகிறார்கள்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share