மரணத்துக்கு பிறகும் தொடரும் சாதி: நீதிபதி வேதனை!

Published On:

| By Balaji

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று(அக்டோபர் 23) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று வேதனை தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்த நீதிபதி, மயானம் என அறிவிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுபோன்ற அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், சாதி பாகுபாடு என்பது மாறாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share