பெங்களூரில் புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசமாகக் கல்வி அளிக்கப்படும் என மேயர் சம்பத் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூர் மேயர் சம்பத் ராஜ் கூறுகையில், பெண் குழந்தைகளை சுமையாக கருதக் கூடாது என்பதற்காக 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சுகப் பிரசவம் மூலம் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்குப் பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி இலவசமாக வழங்கப்படும். பெங்களூரு மாநகராட்சி ரூ.5 லட்சம் பணத்தை நகர ஆணையர் மற்றும் பெண் குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்யப்படும். அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி, அந்தக் குழந்தையின் படிப்புக்கு உதவும்.
புத்தாண்டு அன்று மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். முதலில் பிறந்த குழந்தை குறித்த தகவலைச் சுகாதார அதிகாரிகள் அளிப்பார்.
ஏழைக் குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்து, அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தால், அதைச் சுமையாகக் கருதுகின்றனர். அப்படி நினைக்கக் கூடாது என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம். அதனால், இயற்கை முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும். நகர்ப்புறங்களில் உள்ள 32 சுகாதார மையங்களில் 26 மகப்பேறு வார்டுகள் உள்ளன.�,