நாட்டிலேயே மேற்கு வங்கத்தில்தான் இம்முறை புதிய வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்கவுள்ளனர்.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் இம்முறை மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளார்கள் என்று மார்ச் 10ஆம் தேதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டபோது கூறியது. இதன்படி நாட்டிலேயே அதிகபட்சமாக 20.1 லட்சம் புதிய வாக்காளர்களை கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. இவர்கள் அனைவரும் தவறாமல் கட்டாயமாக வாக்களிக்கும் பட்சத்தில், இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் அதிக இளைஞர்களைக் கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கும்.
இதற்கடுத்து, உத்தரப் பிரதேசத்தில் 16.7 லட்சம் பேரும், மத்தியப் பிரதேசத்தில் 13.6 லட்சம் பேரும் இம்முறை முதல்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 8.9 லட்சம் பேர் இம்முறை முதல்முறையாக வாக்களிக்கவுள்ளனர். ராஜஸ்தானில் 12.8 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 11.9 லட்சம் பேரும், ஆந்திரப் பிரதேசத்தில் 5.3 லட்சம் பேரும், டெல்லியில் 97,684 பேரும் முதல்முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். ஒட்டுமொத்த வாக்காளர்களில் 1.5 கோடி வாக்காளர்களின் வயது 18 முதல் 19 மட்டுமே. இது ஒட்டுமொத்த வாக்காளர்களில் 1.66 விழுக்காடாகும். எனவே இந்த இளைஞர்களின் வாக்குகளைக் கைப்பற்றவும் இம்முறை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.�,