மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியதற்கு கே.எஸ். அழகிரி பதிலளித்துள்ளார்.
**ராஜேந்திர பாலாஜி சொன்னது என்ன?**
நாங்குநேரி தொகுதி களக்காடு அருகே உள்ள கருவேலங்குளத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று(அக்டோபர் 11) செய்தியாளர்களைச் சந்தித்த போது, “ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது என்று தி.மு.க.வின் பினாமி சங்கங்கள் மூலம் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. தொடர்ந்து கருணாநிதி இறந்த பிறகு அதே மெரினாவில் இடம் கேட்டனர். அப்போது தி.மு.க. பினாமி சங்கங்கள் மூலம் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரவோடு, இரவாக வாபஸ் வாங்கினர். இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்க முடியும். ஆனால் மனிதாபிமான முறையில் அதை செய்யவில்லை. அதை தி.மு.க.வினர் உணரவும் இல்லை.
பெருந்தலைவர் காமராஜர் ஒரு எளிமையான தலைவர், அனைவராலும் நேசிக்கக்கூடிய தலைவர். 9 ஆண்டு காலம் தமிழக முதல் அமைச்சராக இருந்த காமராஜர் இறந்தபோது, காங்கிரஸ் கட்சியினர், அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வலியுறுத்தினர். அப்போது முன்னாள் முதல் அமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் கொடுக்க முடியாது என்று கருணாநிதி கூறினார். ஆனால் முதல் அமைச்சர் பதவியில் இல்லாதபோது கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்காத தி.மு.க.வை காங்கிரஸ் தொண்டர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்” எனக் கூறினார்.
**கே.எஸ்.அழகிரி பதில்**
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் கருத்தை விமர்சித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அறிக்கை ஒன்றை இன்று(அக்டோபர் 12) வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் ஒருங்கிணைந்த கடுமையான உழைப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காமராஜரின் உடலை சென்னை கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் கோரியதை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக மறுக்கிறேன், கண்டிக்கிறேன்.
காமராஜர் மறைந்த போது, அவரை எங்கே அடக்கம் செய்வது என்கிற நிலை ஏற்பட்டபோது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலர், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்யலாம் என்று யோசனை தெரிவித்தனர். ஆனால், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, காமராஜர் மறைவுக்கு தமிழக அரசின் சார்பாக ஒருநாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்ததோடு, அவரது பூத உடலை சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்தார்.
அத்தோடு, அவரை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்வதை விட அனைத்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காமராஜருக்கு கிண்டி காந்தி மண்டபத்திற்கு அடுத்துள்ள இடத்தை தேர்வு செய்து அங்கே இறுதிச் சடங்கு செய்யலாம் என்று முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து அன்றைய காங்கிரஸ் தலைவரான ப. நெடுமாறன் ஒரு பேட்டியில் இதுகுறித்து தெளிவுபடக் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், சென்னைக் கடற்கரை சாலையில் காமராஜரை அடக்கம் செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் எவரும் கோரவில்லை என்பதையும் உறுதிபடக் கூறியிருக்கிறார்.
உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களை ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். சமீபகாலமாக ஒரு மனநோயாளியைப் போல ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. தமிழக அரசியலில் ஒரு மிகச் சிறந்த காமெடியனாக, அரசியல் கோமாளியாக ராஜேந்திர பாலாஜி பேசி வருகிறார். இதனால், தற்காலிகமாக பரபரப்பு அரசியலுக்கு ஊடக வெளிச்சம் அவருக்கு கிடைக்கலாம். ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு காமராஜரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அதிமுகவினர் எவருக்கும் தகுதியில்லை” எனக் கூறியிருக்கிறார் கே.எஸ். அழகிரி.
மேலும், “தோல்வி பயத்தில் உள்ள அதிமுகவினர் காமராஜரின் பெயரை பயன்படுத்தி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைப்பது வெறும் பகல் கனவாகத் தான் முடியும். இனியும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மலிவான அரசியலுக்கு காமராஜர் பெயரை பயன்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்,” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
�,”