தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை மத்திய அரசு தடுக்காவிட்டால் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம், மண்டபம், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த 105 படகுகளை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு நேற்று அறிவித்தது.
இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இலங்கை அரசின் இந்த செயலுக்கு மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்காதது மீனவர்களை கோபமடையச் செய்திருக்கிறது.
இதனையடுத்து இன்று(ஜனவரி 24) ராமேஸ்வரம் மீனவர்கள் அவசர ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினர்.
அதில், ஒவ்வொரு மீனவனின் உழைப்பும், ரத்தமும், வியர்வையும் சேர்ந்தது அந்த படகு. அந்த படகுகள் இந்திய அரசின் சொத்து. அந்த படகுகளை ஏலம் விடுவதை மீனவர்கள் வன்மையாக கண்டித்தனர். இதனை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை வேண்டும். தமிழக அரசு வழங்கியது போல மத்திய அரசும் ஏழை மீனவ குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய அரசால் வழங்கப்பட்ட குடியுரிமை ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
**-வினிதா**
�,