கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி பாட்டில்களை சுற்றுலாப் பயணிகள் சாலையோரத்தில் ஆங்காங்கே வீசி செல்வது தொடர்கதையாகி விட்டது.
இதைத் தடுக்கும் வகையில் கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைப்பாதை, கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருகிற பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, சுற்றுலாப் பயணிகளிடம் வனத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள சுற்றுலாப் பயணிகள், “குழந்தைகளுடன் வரும்போது தண்ணீர் பாட்டில்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே தொட்டிகளை வைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களைப் பறிமுதல் செய்யலாம்” என்றனர்.
**-ராஜ்-**
.