சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங்களின் மீது ஆணியடித்து தனியார் நிறுவனங்கள் விளம்பரப் பலகைகள் வைக்கின்றன. மின் வயர்கள், டியூப் லைட், சீரியல் லைட் போன்றவையும் மரங்கள் மீது வைக்கப்படுகின்றன. எனவே சட்ட விரோதமாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மற்றும் மின்சார சாதனங்கள் ஆகியவற்றை அகற்றச் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இதுபோன்ற விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவதால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக 2018ல் மாநகராட்சியிடம் கொடுத்த புகார் மனு மீது எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில், சாலையோர மரங்களைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சாலையோரங்களில் உள்ள மரங்களைச் சேதப்படுத்திய தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்களை 6 வாரத்திற்குள்ளும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 8 வாரத்திற்குள்ளும் அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
**-கவிபிரியா**�,