கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: கடைக்குச் செல்லும்போதும் கவனம் தேவை!

Published On:

| By Balaji

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்துக் கடைகள் போன்ற இடங்களுக்குச் சென்றுதான் ஆக வேண்டியிருக்கிறது. அந்த இடங்களிலிருந்து மட்டும் கிருமிகள் பரவாதா என்று கேட்டால், ‘பரவும்’ என்பதே சரியான பதில். முக கவசம் அணிந்துகொண்டு அன்றாடம் செல்லக்கூடிய இந்தக் கடைகளிலிருந்து கிருமித் தொற்று ஏற்படாமலிருக்க சில பரிந்துரைகள்…

**கூடைகள், டிராலிகளில் கிருமிகள்**

கடைகளுக்குச் சென்றவுடன் முதலில் நாம் தொடுவது அங்கிருக்கும் கூடைகள், டிராலிகளைத்தான். அவற்றின் கைப்பிடிகளில் எண்ணற்ற கிருமிகள் காணப்படும். சிலர் டிராலிகளில் சிறிய குழந்தைகளை உட்கார வைத்திருப்பார்கள். கிருமிகள் குழந்தைகளை எளிதில் தாக்கும் என்பதால், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம். அதனால், கூடைகளைக் கையாள்வதில் கவனம் வேண்டும்.

**சுய சுகாதாரம்**

ஒரு சில பொருள்கள் மட்டும்தான் வாங்க வேண்டும் என்றால் கைகளிலேயே வைத்துக்கொண்டு பில்லிங் கவுன்ட்டருக்குச் செல்லுங்கள். அதிக பொருள்களை வாங்க வேண்டிவந்தால் கூடையை எடுத்தபிறகு உங்கள் கைகளை முகம், வாய், கண்களில் வைக்காதீர்கள்.

அழுக்கான, கிருமித் தொற்றுள்ள கூடைகளை, டிராலிகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலை பெரும்பாலும் ஏற்படும். அப்படியென்றால் கடைகளிலிருந்து வெளியே வந்தவுடனேயே ஹேண்ட் சானிட்டைசர் வைத்து கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டுக்குச் சென்றவுடன் தண்ணீர் பயன்படுத்தி சோப் போட்டு கைகளை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். கடைகளில் கூடையைக் கையில் எடுத்த பிறகு, செல்போன்களை எடுத்துப் பயன்படுத்த வேண்டாம். கூடைகள் அல்லது கடையில் வேறு பகுதியிலிருக்கும் கிருமிகள் செல்போனுக்கு இடம் மாறலாம். அங்கிருந்து உடலுக்குள்ளும் சென்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

**சூப்பர் மார்க்கெட் குழந்தைகளைத் தவிர்த்திடுங்கள்**

நோய் பரவல் இருக்கும் இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லுங்கள். குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் என்பது ஒரு காரணம். கொரோனாவைப் பொறுத்தவரை, குழந்தைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால், குழந்தைகளால் கிருமிகளைப் பிறருக்குக் கடத்த முடியும். ஆகவே, அவர்களைத் தவிர்ப்பதே நல்லது. இதுபோன்ற நேரங்களில் குடும்பமாக ஷாப்பிங் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். வீட்டில் ஒருவர் மட்டும் வழக்கமாகச் சென்று பொருள்களை வாங்கி வருவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

**பணமில்லா பரிவர்த்தனை**

கடைகளில் பணம் செலுத்துவதற்குப் பதில் பணமில்லா பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கிருமிகள் தேங்கியிருக்கும் பொருள்களில் ரூபாய் நோட்டுகளுக்கும் இடமுண்டு. குறிப்பாக, பணத்தைக் கையாள்பவர் சுய சுகாதாரத்தைப் பேணாமல், அவருக்கு சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் கிருமிகள் பரவலுக்குக் கூடுதல் வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே, பணப்பரிமாற்றத்தைக் கூடுமானவரைத் தடுக்கலாம். சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் அதிகக் கூட்டமில்லாத நேரத்தைத் தேர்ந்தெடுத்து ஷாப்பிங் செல்லுங்கள்.

**பக்கத்தில்தான் கடை என்றாலும் பாதுகாப்பாகவே சென்று வாருங்கள்!**

[நேற்றைய ரெசிப்பி: கறிவேப்பிலை குழம்பு](https://minnambalam.com/k/2020/04/04/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share