தனியாக இருக்கும் நபர்கள் சாப்பிட விரும்பும் பொருளை ஆன் லைனில் ஆர்டர் செய்தால் சுடச்சுட கிடைக்கின்றன. இது, மாதத்தின் முதல் வாரத்துக்கு ஓகே. ஆனால், எல்லா நாட்களுக்கும் கட்டுப்படியாகுமா? இப்படிப்பட்டவர்களுக்கும் புதிதாகச் சமையல் கற்க விரும்புபவர்களுக்கும் அரைத்தே விற்கப்படும் தோசை மாவு அவ்வப்போது உதவும். அந்த தோசை மாவுடன் சில பொருட்களைச் சேர்த்து செய்யப்படும் இந்த பனீர் ஊத்தப்பம், பர்ஸுக்கும் உடல்நலத்துக்கும் தீங்கு விளைவிக்காது.
**என்ன தேவை?**
தோசை மாவு – 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் – தலா கால் கப்
நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பனீர் – அரை கப் கடுகு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். தோசை மாவுடன் வதக்கிய கலவை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைச் சற்றுக் கனமான ஊத்தப்பங்களாக ஊற்றி, மேலே உதிர்த்த பனீர் தூவிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: காய்கறி அடை](https://minnambalam.com/k/2019/10/09/5/cooking-smayal-veg-dosai-adai-vegetables)�,