சில நேரங்களில் வித்தியாசமாக, ஆரோக்கியமாகச் சுடச்சுட சாப்பிடத் தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ள பச்சைப்பயற்றைக் கொண்டு இந்தப் பச்சைப்பயறுக் கஞ்சியும், எள் துவையலும் செய்து குடும்பத்தினருக்கு அளியுங்கள். இது சத்து நிறைந்தது. அதோடு மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும்.
**என்ன தேவை?**
புழுங்கல் அரிசி – ஒரு கப்
பச்சைப்பயறு – கால் கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6 – 8 (தோலுரிக்கவும்)
பூண்டு – 3 பல்
சீரகம் – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு.
**துவையல் செய்ய**
எள் – கால் கப்
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 2 பல்
புளி, கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
பச்சைப்பயற்றை வறுத்து அரை மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும். அரிசி, பச்சைப்பயறு, மஞ்சள்தூள், உப்புடன் 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும். பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். குக்கரில் நான்கு விசில்விட்டு இறக்கவும்.
எள் துவையல் செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் நன்றாக வறுத்து, தண்ணீர் தெளித்து அரைத்துக்கொள்ளவும். கஞ்சியுடன் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: செளசெள துவையல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/03/3)�,