உரத் தட்டுப்பாடு: வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்!

Published On:

| By Balaji

உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க உதவி எண்ணும், புகாரை விசாரித்து தீர்வு காண தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் உரம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு விவசாயிகளைக் கவலையடைய செய்திருக்கிறது. அதனால் உரத் தட்டுப்பாட்டை சரிசெய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் நெற்பயிர் 18.5 லட்சம் எக்டர் பரப்பிலும், சிறுதானியம், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி பயிர்கள் சேர்த்து 46.2 லட்சம் எக்டர் பரப்பளவிலும் பயிர் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு தேவையான உரங்கள், மாநிலத்தில் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் 4,354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மாதந்தோறும் மாநில அரசுக்குத் தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. ஒதுக்கீடுசெய்யப்பட்ட உரங்கள் சுமார் 15 உர நிறுவனங்கள் வாயிலாக மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் உரம் வழங்குதல், உர நகர்வு, உர கண்காணிப்பு, தரப் பரிசோதனை முதலான பணிகள் மாவட்ட அளவிலான வேளாண்மை உதவி இயக்குநரால் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) கண்காணிக்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கு உரம் தொடர்பான கோரிக்கைகள், புகார்களைத் தெரிவிக்கவும், அதனை நிவர்த்திசெய்யவும் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவுப்படி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்வதற்காகவும் உர உதவி மையம், சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் பதிவுசெய்திடலாம். விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களைப் பதிவுசெய்து உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள், புகார்களை 9363440360 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு வாய்மொழியாகவும், வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share