கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு 2600 ஆண்டுகள் பழமையானது என இன்று(செப்டம்பர் 19) வெளியிடப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இன்று (செப்டம்பர் 19) கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வு அறிக்கை, **கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்** என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் வெளியாகியது. இப்புத்தகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் வெளியிட்டார்.
**கீழடி: நாகரீகத்தின் களஞ்சியம்**
சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் எழுத்தறிவு, கலையறிவு, பெருநகர நாகரீகம், வாணிபம் என தமிழர் நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான தொல்லியல் சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.
இந்த ஆய்வு முடிவுகளின் படி, கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை நகர்ப்புற நாகரிகம் கொண்ட பகுதியாக கீழடி விளங்கியுள்ளது. மற்றொரு பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், கங்கை நாகரிகத்திற்கு சமகாலமானதாக தமிழகத்தின் நகர்ப்புற நாகரிகமும் இருந்தது தான்.
முன்னதாக 1947 ஆம் ஆண்டு அரிக்கமேடு, 1965 ஆம் ஆண்டு காவேரி பூம்பட்டினம், 2005 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோது, நகர்ப்புற குடியேற்றங்கள் அங்கிருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த நிலையில், கீழடியில் நகர்ப்புற நாகரிகத்திற்கான சான்று கிடைத்துள்ளது பிரமிக்க வைக்கிறது.
கீழடி அகழாய்வில் தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆதன், குவிரன் ஆதன் போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளதால் தமிழ் பிராமியின் காலகட்டம் கிமு 6ஆம் நூற்றாண்டு எனத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் தமிழர்கள் எழுத்தறிவு வரலாற்றில் முன்னோடிகளாக இருந்தது அறியப்பட்டுள்ளது.
திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களின் எலும்புகள் கண்டறியப்பட்டதால் சங்க காலச்சமூகம் வேளாண்மையையும், கால் நடை வளர்ப்பையும் முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
பெருங்கற்கால மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எழுத்து வடிவமாக விளங்கியதும், தமிழ் பிராமிக்கு முந்தைய வடிவமாக விளங்கிய குறியீடுகள் கீழடி அகழாய்வில் 1001 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு கிடைத்துள்ளதால் வெளி நாட்டினருடன் வாணிபம் மேற்கொண்டதற்கு இது சான்றாக உள்ளது.
இது குறித்து தொல்லியல் துறை ஆணையர் உதய சந்திரன், “சிந்து எழுத்துக்கும் தமிழ் பிராமி எழுத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதாகவும், இந்த சான்றுகள் அந்த இடைவெளியை நிரப்பக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
மேலும், சதுரங்க விளையாட்டில் பயன்படும் பல்வேறு அளவிலான சதுரங்க காய்கள் கிடைத்துள்ளது. பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் தங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், 4000க்கும் மேற்பட்ட கல்மணிகள், கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. கீழடியில் உள்ள கட்டுமானப் பொருட்களை ஆய்வுக்குட்படுத்தியதில் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கீழடியில் கிடைக்கப் பெற்றுள்ள பெரும்பாலான தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன.
மேலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மதிப்புறு அணிகலன்கள், விளையாட்டு பொருட்கள், அரவைக் கல், கவினைப் பொருட்கள்,சுடுமண் உருவங்கள், நாணயங்கள், நெசவு பொருட்கள் ஆகியவற்றின் மூலம் நன்கு கல்வியறிவு பெற்ற நாகரிக பண்பாட்டுடன் அங்கு மக்கள் வாழ்ந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
**போதுமான முன்னறிவுப்பில்லை**
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய தொல்லியல் ஆய்வு முடிவுகளின் வெளியீடானது எந்த ஒரு முன்னறிவுப்புமின்றி நடந்துள்ளது. சென்னை அருங்காட்சியகத்தில் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமைச்சர் பாண்டியராஜனை செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், “கீழடி கையேடு விரைவாக வெளியிட வேண்டும் என்பதற்காக புத்தக வெளியீட்டை எளிமையாக நடத்தினோம். முழுமையான அறிக்கை கிடைக்கும் முன்பாக இதை வெளிப்படுத்தி விட்டால் அறிஞர்கள் அதில் குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது. இது தமிழர்கள் நாகரிகம் என்பதோடு மட்டுமில்லாமல் இந்திய நாகரிகமும் சேர்ந்ததுதான். எனவே இதை உலக அரங்கில் கொண்டு சேர்க்க வேண்டியது மத்திய தொல்லியல் துறையினுடைய பொறுப்பும் கூட. இந்த ஆய்வு முடிவுகளை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” எனக் கூறினார்.
அடுத்த ஆண்டு கீழடிக்கு அருகில் உள்ள இடுகாடாகக் கருதப்படும் கொந்தகை , மணலூர், அகரம் ஆகிய இடங்களை ஆய்வுக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தொல்லியல் துறை ஆணையர் உதய சந்திரன் தெரிவித்தார்.
�,”