தி பொயட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள திரைப்படம் ஜடா. கதிர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார்.
கதிருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தை யோகிபாபு கையாண்டுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் டிசம்பர் 6-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று( நவம்பர் 27) நடந்தது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் குமரன், கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு உரையாற்றினர். முக்கிய விருந்தினர்களாக இயக்குநர் புஷ்கர்-காயத்ரி கலந்து கொண்டனர்.
செவன்ஸ் ஃபுட்பால் விளையாட்டை முக்கியக் கதைக்களமாகக் கொண்டுள்ள இந்த படத்தில் இடம்பெறும் ஃபுட்பால் பாடலை எழுதிய பாடலாசிரியர் லோகன் உரையாற்றும்போது, ‘இந்தப்பாடலை எழுதுவதற்கு முன்னதாக நிஜ வாழ்க்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுடன் உரையாடினேன். இந்தப் பாடல் ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்காக எழுதப்பட்டது’ என்று கூறினார். படத்தின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பேசும் போது சில திரைப்படங்களுக்கு முயூசிக் தேவை இருக்காது. அதன் அவசியம் இல்லாமலேயே அந்தப் படத்தால் உணர்வுகளைக் கடத்த இயலும். கைதி, ஜடா போன்றவை அது போன்ற திரைப்படங்கள். இந்தப் படத்தின் இசையில் சில புது முயற்சிகளைக் கையாண்டுள்ளோம். அது கதாபாத்திரங்களின் உணர்வுகளை, அவர்களின் மன ஓட்டத்தையும் விளக்குவதாக இருக்கும் என்று கூறினார்.
படத்தின் இயக்குநர் பேசும்போது, இந்த மேடை எனது பல வருட கனவு. எனது குடும்பம் இன்றி இது சாத்தியமாகியிருக்காது. அவர்களுக்கு தான் எனது முதல் நன்றிகள். இந்த மேடை என் கனவுகள் நிறைந்து இருந்தது. நான் தூக்கத்தில் கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. இதற்கு படக்குழுவினரின் முழு ஒத்துழைப்பு தான் காரணம். நான் எழுதிய கதையை எடுத்துச் சென்று புஷ்கர்-காயத்ரி இயக்குநர்களிடம் காண்பிக்க வேண்டும் என்ற போது பதற்றமாக இருந்தது. அவர்களுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியிருந்த எனக்கு, நான் எழுதிய கதையைக் கூறக்கிடைத்த தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
படத்தின் கதாநாயகன் கதிர் பேசும் போது, “இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி உறுதுணையாக இருந்து எங்களுக்கு வழிகாட்டினர். அவங்களோட பசங்க எல்லாரும் சேர்ந்து ஒரு படம் பண்ண எப்படி இருக்குமோ அதுதான் ஜடா. குமரன் அற்புதமான கிரியேட்டர் என்பதை தாண்டி துளியும் ஈகோ இல்லாத டைரக்டர். நான் உட்பட யார் என்ன கருத்து சொன்னாலும் அதை உள்வாங்கி சிறப்பாகச் செய்வார். சாம்.சி எஸ் இசை படத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளது.
ஜடா ஒரு சாதாரணப் படமாக இருக்காது. நீங்கள் இதுவரைப் பார்க்காத நிறைய ப்ளேவர்ஸ் இந்த படத்தில் உங்களுக்குக் கிடைக்கும். இண்டெர்நேஷனல் ஃபுட்பாலுக்கும் ஸ்ட்ரீட் ஃபுட்பாலுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவற்றை ஜடா விளக்கும். இதில் நிறைய உணர்ச்சிகள் இருக்கும். பிகில் படமும் ஃபுட்பால் குறித்த கதை என்பதால் பலரும் இது குறித்து கேட்கிறார்கள். பிகில் வேறு ஜடா வேறு. இரண்டும் வேறுபட்ட விஷயங்களைப் பற்றிக் கூறும்.
குறிப்பிட்ட நெறிமுறைகளைப்பின்பற்றி விளையாடும் இண்டெர்நேஷனல் ஃபுட்பாலுக்கும், ஜெயிப்பதற்காக எதையும் செய்யலாம் என்னும் ஸ்ட்ரீட் புட்பாலுக்கும் இடையாயான வேறுபாட்டை இந்தப்படம் விளக்கும். ஸ்ட்ரீட் ஃபுட் பால் மேலே வர முடியாததற்கான காரணம் குறித்தும் படம் பேசும். ஒரு பேஸ்கட் பால் பிளேயரான எனக்கு இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாம்.சி எஸ் இசையை பெரிய ஸ்கிரீனில் கேட்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. இயக்குநர் குமரன் ஒளிப்பதிவாளர் சூர்யா இருவரின் காம்பினேஷன் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வரக் காரணம். இது ஒரு சிறந்த டீம் ஒர்க். அனைவருக்கும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்கள் எடுக்கவே ஆசை. இதுவும் ஒரு மாறுபட்ட களம் கொண்ட பரியேறும் பெருமாள் போன்று இருக்கும்” என்று கூறினார்.
�,”