kமீனவர் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டைகள்!

Published On:

| By admin

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் மீனவரின் வலையில் சிக்கியுள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சோமசுந்தரம், நேற்று (ஏப்ரல் 5) தனக்கு சொந்தமான படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கடலில் மிதந்து வந்த சில மூட்டைகள் அவரது வலையில் சிக்கியுள்ளது. அதை எடுத்து பார்த்ததில், அவை அனைத்தும் கஞ்சா மூட்டைகள் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர் சோமசுந்தரம், உடனடியாக இது குறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் அளித்தார். பின்னர் கடலோரக் காவல் படை அறிவுறுத்தலின் பேரில், அந்த மூட்டைகளை மீனவர் சோமசுந்தரம் கரைக்குக் கொண்டு வந்தார். இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் ஐந்து மூட்டைகளில், 160 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கஞ்சா மூட்டைகள் கடலுக்குள் எவ்வாறு சென்றது, இந்தப் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததா, இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பன குறித்து கடலோரக் காவல் படையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா மூட்டைகள் மீனவரின் வலையில் சிக்கியுள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share