கமல்ஹாசனை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுவதாக நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 65ஆவது பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 7) கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று மாலையே சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்த கமல்ஹாசன், இன்று காலை அங்கிருந்து காரில் சொந்த ஊரான பரமக்குடி சென்றார்.
தொடர்ந்து இன்று காலை சாருஹாசன், சுகாசினி மணிரத்தினம், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பின்னர் அவர்கள் இணைந்து குடும்பப் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். கமல்ஹாசன் பிறந்தநாளான இன்றுதான் அவரது தந்தை சீனிவாசன் மறைந்த தினம். ஆகவே, அவருக்கு பரமக்குடியிலுள்ள அவர்களது சொந்த இடத்தில் சிலை அமைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிலையை திறந்துவைத்தார். மேலும், அங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் அமைக்கப்பட்ட திறன்வளர் மேம்பாட்டு பயிற்சி மையத்தையும் துவங்கிவைத்தார்.
அதன்பின்னர் தெளிச்சாநல்லூரியில் நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் பிரபு, “அண்ணன் கமல்ஹாசன் மீது அப்பா சிவாஜி கணேசனுக்கு அளவுகடந்த பிரியம் உள்ளது. எனக்கு திரையுலக வாரிசு கமல் மட்டும் தான் என சிவாஜி கணேசன் கூறுவார். தன்னை விட கமலுக்கு தொழில்நுட்பம் தெரியும் என்றும் அடிக்கடி சொல்வார். அன்பால் அவரை அடித்து துவைத்துவிடலாம். ஏனெனில் அன்புக்கு அவர் அடிமை. கமல்ஹாசனை ஜனாதிபதியாக பார்க்க வேண்டுமென திருமதி சாருஹாசன் சொன்னார்கள். அவருடைய தம்பிகளுக்கு எல்லாம் அவரை ஜனாதிபதியாக பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசை” என்று குறிப்பிட்டார்.�,”