kகமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?

public

டி.எஸ்.எஸ். மணி

தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அலை அதிகமாக இருப்பதாகப் பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. பொதுவாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மீது பொதுமக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் நம்பிக்கையின்மை அதிகரித்துவரும் வேளையில், புதிய சக்திகள் தேர்தல் களத்தில் இறங்குவதை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கிற சக்திகள் வரவேற்கின்றன. அதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முறை மீதே மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவரும் வேளையில், அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இந்த முறை மீது வெறுப்பு அதிகரிக்கும் வேளையில் அதைச் சரிக்கட்ட ஆள்வோர் சில புதிய முறைகளைத் தேட வேண்டியுள்ளது. அதனாலேயே பிரபலங்கள் கட்சி தொடங்குவதையும் பிரபலங்கள் கட்சிகளின் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதையும் காண முடிகிறது. பிரபலங்களைத் தேடி இளைய தலைமுறையினர் நம்பிக்கைக்கொண்டு திரள்வதையும் காண முடிகிறது. அத்தகைய பிரபலங்களில் விளையாட்டு வீரர்களும், திரைத் துறைக் கலைஞர்களும் முக்கியமாகத் திகழ்கின்றனர்.

மேற்கண்ட பட்டியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், கோபிகிருஷ்ணா, கவுதம் காம்பீர் முதலானோர் வருவார்கள் என்பது சொல்லாமலேயே விளங்கும். அதன் அடிப்படையில்தான் கமல்ஹாசனின் செயல்பாடுகளுக்கு உள்ள விளைவுகளைக் காண வேண்டியிருக்கிறது.

கமல்ஹாசன் இந்தியா முழுவதும் பிரபலமாக அறிமுகமானவர். எனவே, அவர் மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கித் தேர்தலில் நிற்பது என்பது நாடு தழுவிய அளவில் கவனிக்கப்படுகிறது. கவனிக்காமல் இருப்பவர்களைக்கூடக் கவனிக்கவைக்க, பினராய் விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, யோகேந்திர யாதவ் எனப் பலரையும் சந்தித்து தனது அரசியல் பிரவேசத்தை நாடறியச் செய்தார் கமல்.

எல்லாமே கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களால் நடந்தவை என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதற்கு முன்பே, வடநாட்டு கார்ப்பரேட் நிறுவனமான கார்வி கருத்துக் கணிப்பொன்றை வெளியிட்டது. ரஜினிகாந்த் முதல்வராக வருவதற்குத் தமிழ்நாட்டில் 16% ஆதரவு இருக்கிறது என எட்டு மாதங்கள் முன்பே வெளியிட்டிருந்தது. அப்போதே அதை அம்பலப்படுத்தி மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம். ஆகவே, நடைபெறுபவை எல்லாம் தற்செயலாகவே நடக்கின்றன என்று நம்பும் நிலையில் நாம் இல்லை.

எனினும், கமல் அரவக்குறிச்சி தொகுதியில் முஸ்லிம் மக்கள் வாழும் பள்ளப்பட்டியில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கோட்சேவைக் குறிப்பிட்டுப் பேசியது தற்செயலாக, அங்கே இருந்த காந்தி சிலையைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு நடந்தது என்றே நாம் நம்பிக்கொள்வோம். ஆனால், அதன் விளைவுகள் என்ன என்பதே இங்கே நமக்கு முக்கியம்.

நிச்சயமாக இன்றைய சூழலில் இந்துக்களோ, முஸ்லிம்களோ இதனால் ஆத்திரப்பட்டு மோதிக்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், போதுமான அளவு மதவாதச் சண்டைகளைக் கேள்விப்பட்டு, அதை வெறுக்கும் மனோநிலைக்குப் பொதுமக்கள் வந்துவிட்டார்கள். ஆனால், தேர்தல் காலத்தில், அதுவும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னால், இத்தகைய சர்ச்சை எழுப்பப்படுவதும், அது நாடும் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதும் தற்செயலானவை அல்ல.

இந்தக் கூற்றைப் பிரபல நடிகர் விவேக் ஓபராய் கண்டிக்கிறார். இந்தியத் தலைமை அமைச்சர் கமலின் கருத்துக்குப் பதில் சொல்கிறார். ஹைதராபாத் முஸ்லிம் தலைவர் ஒவைசி கமலின் கருத்தைப் பாராட்டுகிறார். இதை அகில இந்தியப் பிரச்சினையாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது. அதுவே ஊடகங்களில் முக்கியச் செய்தியாக மாற்றப்படுகிறது.

மன்னார்குடி ஜீயரின் மிரட்டல், தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோரின் பதில்கள் என இந்தப் பிரச்சினையின் நெருப்பு அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. இதை இப்படியெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்குவது யாருடைய நன்மைக்காக? நாட்டில் முக்கிய அரசியல் பிரச்சினைகள் பின்தள்ளப்பட்டு கோட்சே பிரச்சினை முதன்மைப்படுத்தப்படுவதற்குக் கமல் பேச்சு காரணமாகிவிட்டதா, இல்லையா? அந்த சர்ச்சையை விடாமல் கமலும் தொடர்கிறாரா, இல்லையா?

இந்தச் சர்ச்சையின் விளைவுகள் ஏழாவது கட்ட வாக்குப்பதிவில் சிலருக்குச் சாதகமானால், அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளும் கட்சிக் கூட்டணிக்கு ஆதரவாக இந்து மக்கள் வாக்குகளையும், கமல் கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம் வாக்குகளையும் இழுத்து, திமுக, அமமுகவுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரிக்கும் என்றும் கற்பனை செய்யலாம். ஆனால், அது அந்த அளவுக்கு நடக்கப்போவதில்லை.

நமக்கு ஆண்டாள் பற்றிய வைரமுத்து எடுத்துக் காட்டிய மேற்கோளை மையமாக வைத்து, நடத்தப்பட்ட பட்டிமன்றமும் திருவில்லிபுத்தூர் ஜீயர் கொதித்து எழுந்ததும் (பிறகு ஜீயர் மன்னிப்பு கேட்டது வேறு கதை) நினைவுக்கு வராமல் இல்லை. இந்தியா முழுவதும், இத்தகைய மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தினால், அப்போதாவது தாங்கள் கடைசி கட்ட வாக்குப் பதிவில் அதிகமான பலன்களைப் பெறலாமா என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களையும் அடையாளம் தெரிகிறது. இந்தச் சர்ச்சையில், ஈடுபட்டவர்கள் எல்லாமே, ஒன்று பாஜகவினர் அல்லது அவர்களுக்குத் துணை செல்பவர்கள் (பீ டீம்) என்று கருதப்பட்டவர்கள் என்பதை நாம் சவுகரியமாக மறந்துவிடலாம். ஆனால், எந்த நேரத்தில், யாருக்குப் பயன்படும்படி ஒரு செயல் நடைபெறுகிறது என்பதே நாம் காண வேண்டிய விவரம்.

கண்டுபிடித்தால் சரி.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://minnambalam.com/k/2019/05/16/93)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/16/70)

**

.

**

[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://minnambalam.com/k/2019/05/16/26)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://minnambalam.com/k/2019/05/15/45)

**

.

**

[அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!](https://minnambalam.com/k/2019/05/15/72)

**

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *