�
பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு நேற்று (ஆகஸ்ட்,21) ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி புனித நூல்களான பகவத்கீதை, குரான், பைபிள், குரு கிரந்த் சாகிப் ஆகியவற்றை மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கத்துடன் கிழித்தாலோ, சேதப்படுத்தினோலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
இதற்காக இந்திய தண்டனை சட்டத்தில் புதிதாக 295 ஏஏ பிரிவு கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி பஞ்சாப் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. முதல் அமைச்சர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பஞ்சாபில் புனித நூல்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கவும், சமூக நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான தகவலைத் தனது ட்விட்டர் பதிவிலும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
�,”