கிராமப்புற தொடக்கப் பள்ளிகளைத் திறக்க நீதிமன்றம் அறிவுரை!

Published On:

| By Balaji

ஊரடங்கு காலத்தில் சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல்பூர்வ ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி “சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப்” என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (ஜூலை 28) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்களை பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக விற்றுவிடுகின்றனர்” என்றார். மேலும் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறினார்.

இதுதொடர்பாக அரசிடம் கருத்து பெற்று தெரிவிப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், கொரோனாவின் தாக்கம் தணிந்துள்ளதாலும், மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்தக் கணிப்பும் இல்லாததாலும், கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

மேலும், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். மாணவர்களுக்கு சத்துணவு சென்றடைவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share