தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் சட்டரீதியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
மேகதாது அணை பிரச்சினை தீவிரமடைந்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று(ஆகஸ்ட் 31) நடைபெற்றது.
ஒன்றிய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லி சேவா பவனில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் பொதுப் பணித்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான, சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர். மேலும்,கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து, கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களாக பாக்கி வைக்கப்பட்டுள்ள, 30.6 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும். செப்டம்பர் மாதத்திற்கான தண்ணீரையும் வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், அதுபற்றி பேசக் கூடாது என தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கவில்லை.
**-வினிதா**
�,