கோவையில் வரும் 9ஆம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் அரசு சார்பில் நடத்தப்படவிருந்த பொங்கல் விழா சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நல்திட்ட விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி புகழ்பெற்றது. இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையில், பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” கோவையில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கு, கட்டுப்பாட்டு பகுதிகள் எதுவும் இல்லையென்றாலும், துடியலூர், சூலூர் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது.
பொது இடங்களில் மக்கள் அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், மக்கள்தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
கோவையில் வரும் 9ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தள்ளி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி எந்த தேதியில் நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டி தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,