oவிதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!

Published On:

| By Balaji

தேர்தல் விதிமுறைகளுடன் இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்தார். “அதில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா இடையாத்தூர் கிராமத்தில் ஸ்ரீ பொன்மாசிலிங்க அய்யனார் கோயில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதற்கு மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அதன்படி, மார்ச் 12 ஆம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மார்ச் 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஜனவரி 20ஆம் தேதி அனுமதி கேட்டு மனு அளித்தோம். தேர்தலை முன்னிறுத்தி, ஜல்லிக்கட்டு நடத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அதனால், வழக்கமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியை அமைதியான முறையிலும், தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றியும் எந்தப் பரிசுப் பொருள்களும் வழங்காமலும் நடத்த வேண்டும் என நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share