புதுமுகங்கள் நிகில் மோகன், ஆகாஷ் ஆகியோருடன் ரகுமான், இனியா, கோவை சரளா, தலைவாசல் விஜய் ,பிரதாப் போத்தன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர்,மேக்னா முகேஷ் போன்றோர் இணைந்து நடித்திருக்கும் படம் சதுரஅடி 3500. இப்படத்தை ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நேற்று முன்தினம் (ஜூலை25) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட, மூத்த இயக்குநரான கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபனின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை அபி சரவணன், கே.பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார். இவ்விழாவில் ரகுமான், இனியா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனைக் கண்டித்து பலரும் பேசினர்.
இதையடுத்து இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகை தந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழா மகிழ்ச்சியாக தொடங்கி, விவாத மேடையாக மாறிவிட்டது. இருந்தாலும் நடிகர் அபி சரவணன் இந்த மேடையினை நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டார். வளரும் போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராக வேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விஷயத்தில் நடந்தால் சந்தோஷம். நடிகை இனியா இப்படவிழாவில் வராதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர்கள் வராததால் நஷ்டம் அவருக்குத்தான் ஒழியப் படக்குழுவிற்கு இல்லை. `சுவர் இல்லாத சித்திரங்கள் ‘ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். `கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன். அவர்களுக்குத் தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விஷயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்”.
“எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஓடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்கவேண்டும். அதற்காகக் காலை காட்சியை ஒதுக்கக்கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்தப் படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதைக் காரணமாக காட்டி தியேட்டரிலிருந்து படத்தைத் தூக்கிவிடுகிறார்கள். படம் பார்த்த ரசிகர்களின் மவுத் டாக் பரவுவதற்குள் படத்தை தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஓடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படங்கள் தியேட்டரில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். அதே போல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல தியேட்டர்களும் சின்ன படங்களை திரையிட முன்வரவேண்டும். இந்தப் படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் எனக் கருதமுடிகிறது. படத்தின் இயக்குநர் ஜாய்சன் அவருடைய குரு வைஷாக்கிற்கு நல்லதொரு மரியாதையைப் பெற்றுத்தருவார். அறிமுக நாயகன் நிகில் சுதந்திரமாக அனுபவித்து நடித்திருக்கிறார். படம் வெற்றிப் பெறும்” என்று தெரிவித்தார்.
�,”